வைணவ சமயம், விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இச்சமயம் இந்துசமயத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும். தமிழ் மொழிக்கு வைணவம் என்ற பெயருண்டு. நாளாயிர திவ்யபிரபந்தம் எனும் ஆழ்வார்கள் இயற்றிய தமிழ்நூலை வேதங்களுக்கு நிகராக போற்றுவதனால் இச்சமயத்திற்கு வைணவம் என்ற பெயர் எற்பட்டதாக கருத்துண்டு.
உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். விஷ்ணு அவதாரங்களில் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, பலராம, கிருஷ்ண, கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உபநிடதங்களில் பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும்.
குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தென் ஆசிய முழுவதும் வைணவம் பரவியிருந்தது. வைணவத்தில் வடகலை, தென்கலை என்று இருபிரிவுகள் உள்ளன.
திருப்பாற்கடல் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பத்து ஆழ்வார்களால் பாடல்பெற்ற இத்தலம் இப்பூமியில் இல்லாத தலமாகும். இந்து தொன்மவியலில் பாற்கடல் என்பது திருமாலின் இருப்பிடமாக கூறப்படுகிறது. இந்த பாற்கடலில் ஆதிசேசன் என்ற பாம்பு படுக்கையில் திருமால் படுத்துக் கொண்டிருப்பதாக திருமுறைகள் குறிப்பிடுகின்றன. இங்கு இறைவன் பாற்கடல் வண்ணனாக (சீராப்திநாதன்)பாம்பணை மேல் தெற்கு நோக்கிய சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறான். இறைவி கடல்மகள் நாச்சியார், பூமாதேவி ஆகியோர். இத்தலத்தின் தீர்த்தம் அமிர்த தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகியன. விமானம் அஷ்டாங்க விமானம்.நிலவுலகில் இல்லாத இந்த திருப்பாற்கடல் மொத்தம் 51 பாக்களால் திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார் முதலிய பத்து ஆழ்வார்களாலும் பாடல் பெற்றது.
ஆதிசேஷன்(சமஸ்கிருதம்:शेष, சேஷா) என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பாற்கடலில் திருமாலின் படுக்கையாக இருக்கின்ற நாகமாகும். ஆதிசேசன் சிவபெருமானது கழுத்தில் ஆபரனமாக இருக்கும் வாசுகி பாம்பின் சகோதரனாகவும் அறியப்படுகிறார்.
ஆயிரம் தலைகளை உடையதான இந்த ஆதிசேஷன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, திருமாலின் ஒவ்வொரு திரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, இணையானதொரு பாத்திரமேற்று வந்தவர். உதாரணமாக, திருமால் இராமபிரானாக அவதரித்த காலை, அவருக்குத் தம்பியாக, இலக்குவனாக உருவெடுத்தவர் ஆதிசேஷனே. இதன் காரணமாகவே, இலக்குவனார், தனது தமையன் இராமபிரானுக்கு நேரெதிராக, வேகம் மிகக் கொண்டவராகவும், முன்கோபம் மிகுந்தவராகவும் காணப்பட்டார் என்பர்.
சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.