நற்றிணை
நற்றிணை (Natrinai) என்பது தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கிய வகைப்பாட்டினுள் காணப்படும் ஒரு நூலாகும். இந்நூல் தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது. எட்டுத்தொகை நூல்கள் இவையெனக் குறிப்பிடும் பழைய வெண்பாவில் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். எட்டுத்தொகை நூல்களில் "நல்" என்ற அடைமொழி பெற்ற நூல் (நல்+திணை) இதுவேயாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் தூதின் வழிகாட்டி என்றும் (வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை - பாடல் எண் 54)[1] கூறுவர். இந்நூலில் கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன. அவைகளில் பெரும்பான்மையானவை ஒன்பது அடி முதல் 12 அடிகள் கொண்ட பாடல்களாக அமைந்துள்ளன. இந்நூலைத் தொகுத்தவர் யாரென அறியப்படவில்லை என்றாலும் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். நற்றிணைப் பாடல்கள் அனைத்தும் அகப்பொருள் அமையப் பெற்ற பாடல்களாம். நற்றிணையில் ஏழு அடிகள் கொண்ட பாடலும் 13 அடிகள் கொண்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏழு அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
எட்டு அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
ஒன்பது அடிகளில் அமைந்த பாடல்கள் - 106
பத்து அடிகளில் அமைந்த பாடல்கள் - 96
11 அடிகளில் அமைந்த பாடல்கள் - 110
12 அடிகளில் அமைந்த பாடல்கள் - 77
13 அடிகளில் அமைந்த பாடல்கள் - 8
234-ஆவது பாடல் கிடைக்கவில்லை.
பாடியோர்
[தொகு]நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடலில் இடம்பெற்றுள்ள தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் -
- வண்ணப்புறக் கந்தத்தனார்
- மலையனார்
- தனிமகனார்
- விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
- தும்பிசேர்க்கீரனார்
- தேய்புரிப் பழங்கயிற்றினார்
- மடல் பாடிய மாதங்கீரனார்
என்ற எழுவராவர். மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இந்நூலில் உள்ள நானூறு பாடல்களில் 234 ஆம் பாடலும் 385 ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கப்பெறவில்லை. இந்நூலினைத் திணை அடிப்படையில் ஆராயும்போது,
- குறிஞ்சித் திணைப் பாடல்கள் - 132
- பாலைத் திணைப் பாடல்கள் - 104
- நெய்தல் திணைப் பாடல்கள் - 102
- மருதத் திணைப் பாடல்கள் - 32
- முல்லைத் திணைப் பாடல்கள் - 30 அமைந்துள்ளன.
நற்றிணை காட்டும் வாழ்க்கை
[தொகு]நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். தலைவன் பிரிவால் வாடும் தலைவி, தன்தலைவனின் வரவைச் சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கமும் காதலன் வரவைப் பல்லி கத்தும் ஓசையை வைத்துச் சகுனம் பார்க்கும் வழக்கமும் அக்காலமக்களிடம் இருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம். மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.
எடுத்துக்காட்டுப் பாடல்
[தொகு]திணை
[தொகு]நெய்தல்
கூற்று
[தொகு]பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. குறிபெயர்த்தீடும் ஆகும்.
- விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
- மறந்தனம் துறந்த கான்முளை ஆகைய
- நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
- நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
- அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
- அம்ம!!நாணுதும் நும்மொடு நகையே!
— நற்றிணை - பா.172.(நெய்தல்)
பதிப்பு வரலாறு
[தொகு]எட்டுத்தொகை நூல்களில் பழைய உரை இல்லாத ஒரே நூலான நற்றிணை என்னும் இந்நூல் முற்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் என்னும் தமிழறிஞர் இந்நூலின் பல சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து ஒப்பிட்டு ஆய்வுசெய்து முதன்முதலில் புத்துரையுடன் 1915-ம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர் வேறு பல தமிழ்ச் சான்றோரும் உரையுடன் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர்."[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ "54. நெய்தல் - Narrinai - நற்றிணை - Ettuthogai - எட்டுத்தொகை - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள்". தமிழ் சுரங்கம். Retrieved 2025-04-24.
- ↑ சங்க இலக்கியப் பதிப்புரைகள். பாரதி புத்தகாலயம், பக்கம் 37
வெளி இணைப்புகள்
[தொகு]- மதுரைத் திட்டம், மூலம் மட்டும் பரணிடப்பட்டது 2004-07-11 at the வந்தவழி இயந்திரம்
- நற்றிணை - எட்டுத்தொகை