தாலி காத்த காளியம்மன்
தாலி காத்த காளியம்மன் | |
---|---|
இயக்கம் | ஆர். சோமசுந்தர் |
தயாரிப்பு | பி. கண்ணப்பன் யாதவ் |
கதை | ஆர்.சோமசுந்தர் பி.கலைமணி (வசனம்) |
இசை | சிற்பி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | கே.ஆர்.ராமலிங்கம் |
கலையகம் | சுந்தர் தியேட்டர்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 16, 2001 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாலி காத்த காளியம்மன் (thaali kaatha kaaliyamman) 2001 ஆம் ஆண்டு ஆர். சோமசுந்தர் இயக்கத்தில், பி. கண்ணப்பன் யாதவ் தயாரிப்பில்,சிற்பியின் இசையில் பிரபு, கெளசல்யா மற்றும் சங்கவி நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்.
கதைச்சுருக்கம்
[தொகு]போஸ் (பிரபு) மற்றும் பாண்டி (பாண்டியராஜன்) ஒரு கிராமத்தின் கோயிலில் வீற்றிருக்கும் காளியம்மன் என்ற பெண் தெய்வத்தைப் பற்றி அறிந்துகொள்ள வருகிறார்கள்.
அந்தக் கோயிலின் கடந்த கால நிகழ்வொன்று அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. அந்தக் கோயில் குளத்தில் இறந்துகிடக்கும் அபிராமி (இந்து) என்ற பெண்ணை அவள் செய்த தவறுக்காக காளியம்மன் தண்டித்துவிட்டதாக கிராம மக்கள் நினைக்கிறார்கள். அந்த கிராம தலைவர் (அலெக்ஸ்) இந்த தெய்வக்குற்றத்தால் அபிராமிக்கான இறுதிச்சடங்களைச் செய்ய அவள் கணவனுக்குத் தடைவிதித்தும், அபிராமியின் குடும்பத்தைக் கிராமத்தை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டதால் அபிராமியின் கைக்குழந்தையான கற்பகம் (கௌசல்யா) அனாதையாகிறாள். கற்பகத்திற்கு நாட்டாமையின் மனைவி மீனாட்சி(மனோரமா) ஆதரவளிக்கிறாள். அதன்பிறகு அந்த கிராமம் வறட்சியாலும் வறுமையாலும் பாதிக்கப்படுவதால் மக்கள் ஒவ்வொருவராக வெளியேறினர் என்பதே அந்த கடந்த கால நிகழ்வு.
இப்போது இளம்பெண்ணான கற்பகத்திடம் அவளின் மாமா தகராறு செய்வதைக் கண்ட போஸ் அவளைக் காப்பாற்றுகிறான். அந்த கிராமத்தில் ஏற்பட்ட வறட்சி நீங்க கற்பகம் உயிரோடு ஆனால் சடலத்தைப் போல் படுத்துக்கொள்ள வேண்டும். அவளைத் தூக்கிக்கொண்டு ஊரைச் சுற்றிவந்தால் மழை பொழியும் என்று முடிவெடுக்கிறார்கள். கற்பகத்தைத் திருமணம் செய்து அவளைக் காப்பாற்ற என்னும் போஸை ஊரார் தடுக்கின்றனர். அப்போது மக்களிடம் நடந்த உண்மையைக் கூறுகிறார் நாட்டாமை. நட்டாமையின் மகன் மருது அபிராமியைக் கொன்றதை மறைக்க தான் அபிராமியின் மீது பொய்ப்பழி கூறியதையும், அதனால் தன் மகனைக் காளியம்மன் தண்டித்துக் கொன்றதையும், தன்னையும் ஊனமாக்கித் தண்டித்ததையும் சொல்லி உண்மையை ஒத்துக்கொள்கிறார். கிராமத்தினர் போஸ் மற்றும் கற்பகத்திடம் மன்னிப்புக் கேட்டு அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர்.
தன் மனைவி கற்பகத்துடன் வீட்டிற்குத் திரும்பும் போஸை அவன் தந்தை தர்மலிங்கம் (மணிவண்ணன்) வாழ்த்தி வரவேற்கிறார். அவர்களுடைய அறைக்கு வரும் ரம்யா (சங்கவி) தான் போஸின் மனைவி என்று சண்டையிடுகிறாள். இதுகுறித்துத் தன் தந்தையிடம் கேட்கும் போஸுக்குத் தன் கடந்த கால வாழ்கை தெரியவருகிறது.
தர்மலிங்கத்தின் குடும்ப நண்பரான காவல்துறை அதிகாரி ராகவனின் (ராசன் பி.தேவ்) மகள் ரம்யா போஸைக் காதலிக்கிறாள். ஒரு பிரச்சனையில் தவறாக போஸைக் கைதுசெய்யும் ராகவன் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுவதால் அதற்குக் காரணமான போஸ் மற்றும் தர்மலிங்கத்தைப் பழிவாங்க எண்ணுகிறார். தனக்குத் தெரியாமல் போஸ்-ரம்யா ரகசிய திருமணம் செய்ததை அறிந்த ராகவன், போஸை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ரம்யாவைக் கடத்திச் செல்கிறான். உயிர்பிழைக்கும் போஸுக்குத் தன் கடந்த காலம் மறந்துபோகிறது. ரம்யாவைப் பற்றியும் எந்தத் தகவலும் தெரியாமல் போகிறது.
தன் கடந்தகாலத்தை அறியும் போஸ், ரம்யாவின் தாயைச் சந்தித்துப் பேசுகிறான். ராகவன் ரம்யாவின் தாலியைக் கழற்ற முயற்சித்தால் ரம்யா தற்கொலை செய்துகொண்டாள். ராகவன் மின்விபத்தின் காரணமாக இறந்துவிட்டதாகக் கூறுகிறாள் ரம்யாவின் தாய். போஸுடன் வாழவேண்டும் என்ற ஆசையை ரம்யாவின் ஆத்மா கற்பகத்தின் உடலில் புகுந்து நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறது. காளியம்மன் தெய்வம் கற்பகத்திற்கு உதவுகிறது. கற்பகத்தின் உடலைவிட்டு ரம்யாவின் ஆத்மா வெளியேறுகிறது. போஸும் கற்பகமும் மகிழ்ச்சியுடன் இணைகின்றனர்.
நடிகர்கள்
[தொகு]- பிரபு - போஸ்
- கௌசல்யா - கற்பகம்
- சங்கவி - ரம்யா
- பாண்டியராஜன் - பாண்டி
- மணிவண்ணன் - தர்மலிங்கம்
- பானுப்ரியா - தாலி காத்த காளியம்மன் (சிறப்புத் தோற்றம்)
- ராசன் பி.தேவ் - ராகவன்
- வெண்ணிற ஆடை நிர்மலா - ரம்யாவின் தாய்
- அலெக்ஸ் - நாட்டாமை
- மனோரமா - காமாட்சி
- தளபதி தினேஷ் - ரஞ்சித்
- இந்து - அபிராமி
- ஜோதி லட்சுமி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- மன்சூர் அலி கான்
- சூர்யகாந்த்
- பேபி ஐஸ்வர்யா - சிறுவயது கற்பகம்
தயாரிப்பு
[தொகு]படத்தின் பாடல்களை காளிதாசன், பழனிபாரதி, கலைக்குமார், விஜய், ரவிசங்கர் எழுத சிற்பி இசையமைத்துள்ளார்.தளபதி தினேஷ் இப்படத்தின் சண்டைப்பயிற்சியாளர்.
விமரிசனம்
[தொகு]தி இந்து நாளிதழ் விமரிசனம்: "இப்படம் குடும்பப்படமாகத் தொடங்கி, இரு கொலைகளுக்கான காரணங்களைக் கண்டறியும் சாகசப் படமாக மாறி, இறுதியில் தலைப்பிற்கேற்ப தெய்வ நம்பிக்கையைக் கொண்டு முடிகிறது. கதை மற்றும் திரைக்கதை எதிர்பாராத பல திருப்பங்களோடு பயணிக்கிறது"[1].