சீகம்பட்டி இராமலிங்கம்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/99/%E0%AE%9A%E0%AF%81.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%28%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%29.jpg/220px-%E0%AE%9A%E0%AF%81.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%28%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%29.jpg)
சு. இராமலிங்க சுவாமிகள் (சீகம்பட்டியார்) சிறந்த சிவ பக்தர். தினமும் சோதிடம் சொல்லுதல்,சைவ சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்துதல் ஆகியவற்றையே தவமாகக்கொண்டு வாழ்கின்றவர். சைவ சித்தாந்தம்,திருமுறைகள்,புராணங்கள்,தேவார இசை, சோதிடம் முதலான பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "சீகம்பட்டியார்", என்றும் "பெரிய சோதிடர்" என்றும்,“குளித்தலையார்” என்றும் அனைவராலும் அழைக்கப்படுகின்றார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
இவரது இயற்பெயர் சு.இராமலிங்கம். தமிழ் நாட்டின் கரூர் மாவட்டம் குளித்தலையில் மேலச்சக்கரக்கோட்டை என்னும் சிற்றூரில் 22.07.1945-இல் ப.சுப்ரமணியத்துக்கும், வீரம்மாள் அம்மையாருக்கும் பிறந்த பத்து பிள்ளைகளில் ஆறாவது மகவாகப் பிறந்தவர். தமிழ் விசுவகர்மா மரபினர். 1971-இல் சமயம், விசேட தீக்கையினையும் 1973-இல் நிருவாண தீக்கையினையும் தேவகோட்டை சிவஸ்ரீ.தத்புருஷ தேசிகரிடம் முறைப்படி பெற்றுக் கொண்டார்.சிவபூசையினை நாள்தோறும் தவறாமல் செய்து வருகின்றார். சு.இராமலிங்க சுவாமிகள் இலட்சுமி என்பவரைத் தனது 29-ஆவது வயதில் திருமணம் புரிந்தார். ஒரு பெண் மகவும் மூன்று ஆண் மகவும் உள்ளனர்.
இயல், இசை, சோதிடக் கல்வி[தொகு]
இவரது தந்தையார் சோதிடத்தில் வல்லவர்; புராண நாடகங்களில் நடிப்பதிலும் தானே கவி இயற்றுவதிலும் ஆற்றலுடையவர். தந்தையாரே இவருக்குத் தமிழ் நெடுங்கணக்கு,சோதிடம் ஆகியவற்றைக் கற்றுத் தந்தார். கல்வி நிறுவனத்தில் சென்று இவர் எக்கல்வியையும் பயிலவில்லை. ஏழு வயது முதலாகவே சோதிடம் பார்த்து சொல்லும் ஆற்றல் பெற்றார்.1971 ஆம் ஆண்டுத்க்குப் பிறகு சைவ சமயத்தில் ஈடுபட்டு அதற்காகவே தம் வாழ்வினை அற்பணித்துக் கொண்டவர். பெரிய புராணம்,திருவிளையாடல் புராணம் முதலான புராணங்களையும் பக்தி இலக்கியங்களையும் தாமே அரிதின் முயன்று கற்றுக் கொண்டவர். சைவத் தீக்கை பெற்றது முதலாகச் சைவ சமய புராணங்களைச் சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை மனப்பாடமாகச் செய்துள்ளார்.
சொற்பொழிவு ஆற்றல்[தொகு]
இவர் சொற்பொழிவு செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடுவார்[1]. எந்தக் குறிப்புமின்றி மூன்று மணி நேரத்திற்கு மேல் சொற்பொழிவு செய்வார். 25-ஆம் அகவையிலிருந்து புராணச் சொற்பொழிவுகள் செய்யத் தொடங்கினார். அவருடைய சொற்பொழிவுகள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், எளிய மக்களது உள்ளம் கவர்ந்தவராக விளங்குகிறார். அவரது "ஆன்மிக மொழி" எளிய மக்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறுவார். இராமலிங்க சுவாமிகள் சைவ சித்தாந்தத்திலும் பெரும்புலமை பெற்றவர்.அவருடைய சொற்பொழிவுகள் எளிய முறையில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.
எழுதிய நூல்கள்[தொகு]
- ஆனந்த தாண்டவம் (உரைநடை)
- வாதவூர் வள்ளல்
- ஸ்ரீசெல்வ விநாயகர் தோத்திரப் பமாலை
- ஸ்ரீபதஞ்சலி வியாக்கிரபாத மகத்துவம்
இவரது சொற்பொழிவுகள் பல குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன.
விருதுகள்[தொகு]
- சைவ சித்தாந்த சரபம்-மதுரை ஆதீனம்(20.09.2002)
- சித்தாந்த சைவச் செம்மணி - திருவாவடுதுறை ஆதீனம்(02.02.2009)
- சைவத் தமிழறிஞர்[2]
மேற்கோள்கள்[தொகு]
- ஸ்ரீவாதவூர் வள்ளல் என்னும் மாணிக்கவாசகர் மாண்பு,அணிந்துரை(மு.வைத்தியநாதன்),ப.எண்.xxi,xxii,xxiii
- ↑ "திருத் தொண்டர் விழா". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2436901. பார்த்த நாள்: 3 September 2021.
- ↑ சைவத் தமிழறிஞர் பரணிடப்பட்டது 2016-08-29 at the வந்தவழி இயந்திரம் - திருச்சிராப்பள்ளித் திருமுறை மன்றம் (26.07.2015)