விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகசுட்டு 30, 2009
வடகாடு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அமைந்திருக்கும் ஓர் அழகிய கிராமமும் ஒரு பெரிய ஊராட்சியும் ஆகும். மா,பலாப்பழம்,வாழை முக்கனிகளுக்கு பெயர் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இது திகழ்கிறது. அனைத்து அரசு அலுவலகங்களும் இங்கு உள்ளன. அரசு மேல் நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு கால்நடை மருத்துவமனை, விவசாய கூட்டுறவு வங்கி, மத்திய அரசுடமையுடைய தலைமை அஞ்சல் நிலையம், காவல் நிலையம், உயர் மி்ன்னழுத்த மி்ன்பகிர்வு நிலையம் உட்பட பல அரசு அலுவலகங்கள் இங்கே உள்ளன.
கிரிகோர் மெண்டல் (Gregor Johann Mendel 1822 – 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆராய்ச்சிப் பணிகளுக்காக அறியப்படும் ஆஸ்திரிய பாதிரியாராவார். இவர், மரபியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்ட மெண்டல், தன்னுடைய தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்த சேர்க்கை நடைபெறச் செய்து, அதன் விளைவுகளை புள்ளிவிபரவியலின் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டார். அதன் பயனாக, மரபுப் பண்புகள் ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்று கண்டறிந்து, 1866ல் அது குறித்து ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். இந்த மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கமையவே அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகின்றன என அவர் கூறினார். அந்த விதிகள் பின்னாளில் மென்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது.