கருநாடக இசை தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.
வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம். பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது. குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.
வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.
வீரமணி ஐயர் (அக்டோபர் 15, 1931 - அக்டோபர் 8, 2003), ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைக் கலைஞரும் ஆவார். பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற 'கற்பகவல்லி நின் பொற்பதம்' என்ற பாடலை இயற்றியவர். யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த ம. த. நடராஜ ஐயர், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு 1931 அக்டோபர் 15 இல் இரண்டாவது புதல்வனாகப் பிறந்த வீரமணிஐயர், தனது சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், (தற்போதைய இணுவில் இந்துக் கல்லூரி) உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். அங்கு படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர்.
கருநாடக இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியக் கலைஞர்களால் ஒரு குறிப்பிட்ட கால அளவு வழங்கப்படும் இசைப்பகுதி, தனி ஆவர்த்தனம் என அழைக்கப்படுகிறது. இதனை 'தனி' என்றும் பேச்சு வழக்கில் அழைப்பர்.
காம்போதி கருநாடக இசையில் மிகப் பிரபலமான ஒரு இராகமாகும். இது 72 மேளகர்த்தா இராகங்களில் 28வது மேளமாகிய அரிகாம்போதி இராகத்தின் ஜன்னிய இராகமாகும்.
கொன்னக்கோல் என்பது கருநாடக இசையில் பயன்படுத்தப்படும் ஒரு உப பக்க வாத்தியம். இதற்கு கலைஞர்களின் குரலே இசைக்கருவி ஆகும். அதாவது வாயால் உச்சரிக்கப்படும் தாளலயம் அல்லது வாயால் சொற்கட்டுகளுடன் வாசிப்பது கொன்னக்கோல் எனலாம்.