மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
Appearance
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 289.
குமரன் என்பது இவர் பெயர். குமரனார் என்பது இவரைச் சிறப்பிக்கும் பெயர். இவரது தந்தை பெயர் சேந்தன். இவர்கள் மருங்கூர்ப்பட்டினத்தில் வாழ்ந்தவர்கள்.
மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார், மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார் ஆகிய புலவர்களும் இவ்வூரில் வாழ்ந்தவர்கள்.
பாடல் சொல்லும் செய்தி[தொகு]
பிரிவுக் காலத்தில் தலைவி தோழியிடம் சொல்கிறாள்.
ஓரிடத்தில் இருக்கும் நிலம் மற்றோர் இடத்துக்கு மாறினாலும் என் தலைவர் சொன்னசொல் தவறமாட்டார். வானம் பொழியும் கார்காலம் வந்ததும் வந்துவிடுவார்.
இப்போது இங்கு மழை பொழிகிறது. அவர் இன்னும் வரவில்லை. இந்த நிலையில் என் மனம் இங்கும் அங்கும் அலைமோதுகிறது. ஒடிந்து தொங்கும் மரம் தழைத்திருப்பது போலக் காணப்படுகிறது.