பெ. சுந்தரம் பிள்ளை
மனோன்மணீயம் பெ. சுந்தரனார் | |
---|---|
![]() | |
பிறப்பு | மனோன்மணீயம் பெருமாள் சுந்தரனார் 4 ஏப்ரல் 1855 ஆலப்புழா, கேரளா, இந்தியா |
இறப்பு | 26 ஏப்ரல் 1897 | (அகவை 42)
தேசியம் | இந்தியர் |
பணி | எழுத்தாளர் |
பெற்றோர் | பெருமாள் மாடத்தி அம்மாள் |
வாழ்க்கைத் துணை | சிவகாமி அம்மாள் |
மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (Manonmaniyam P. Sundaranar, ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) என்பவர் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவரும் பேராசிரியரும் ஆவார். தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியமைக்காக அறியப்படுகிறார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சுந்தரனார், 1855-ஆம் ஆண்டு, கேரளாவின் ஆலப்புழா நகரில் பெருமாள், மாடத்தி அம்மாளுக்கு இணையருக்கு மகனாகப் பிறந்தார்.[2] இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவருக்குத் தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமி. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1876-ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
ஆசிரியப் பணி
[தொகு]சுந்தரனார், 1877-ஆம் ஆண்டு, தனது ஆசிரியப் பணியைத் தொடங்கினார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச்சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார்.[3] பின்னர், திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880-இல் முதுகலை பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வித்தி தொடர்பு இவருக்குக் கிடைத்தது.
மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885-இல் டாக்டர் ஹார்வித் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரனாரைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை இறுதிவரையில் திறம்படத் தாங்கினார். 1878-இல் தாயாரையும், 1886-இல் தந்தையையும் இழந்தார். இவருடைய மகன் நடராசன் பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.
சமயப்பணி
[தொகு]சுந்தரனார், திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன.
தமிழ்ப்பணி
[தொகு]சுந்தரனார், 1891-ஆம் ஆண்டு, மனோன்மணீயம் என்னும் ஒப்பற்ற நாடக நூலை எழுதி வெளியிட்டார்.[4] சுந்தரனாரின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவார். இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.
சுந்தரனார், கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தரின் காலத்தை ஆய்வு செய்து அவ்வாராய்ச்சியினை 1894-ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்
[தொகு]மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக சூன் 1970-இல் அறிவிக்கப்பட்டது.
“ | நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில் தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே ! உன் சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே ! |
” |
“ | அலை கடலே ஆடையான
இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண
எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும்
தெய்வமகள் ஆகிய தமிழே
என்றென்றும் இளமையாக இருக்கிற
உன்னுடைய இந்த அழகைக் கண்டு
வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம்
வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.
|
” |
முழுமையான தமிழ் தாய் வாழ்த்து
“ | நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் |
” |
இறுதி நாட்கள்
[தொகு]பேராசிரியர் சுந்தரனார் தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரனார் தமது 42வது வயதில் 1897, 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.
வெளியிட்ட நூற்கள்
[தொகு]- நூற்றொகை விளக்கம் (1888)
- மனோன்மணீயம் (நாடக நூல், 1891)
- திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி (Early Sovereigns of Travancore, 1894)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Randor Guy (19 December 2010). "Manonmani 1942". தி இந்து இம் மூலத்தில் இருந்து 22 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022161520/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article961803.ece.
- ↑ "மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த நாள்: ஏப்.4- 1855". Maalaimalar. 2021-04-04. Archived from the original on 2021-11-01. Retrieved 2021-11-01.
- ↑ "Madurai Diraviyam Thayumanavar Hindu College, Tirunelveli". Mdthinducollegetirunelveli.org. Archived from the original on 10 May 2013. Retrieved 2015-07-22.
- ↑ "தமிழ்த் தாய் வாழ்த்து: தமிழக அரசாணை சொல்வது என்ன? - தினசரி". dhinasari.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-11-01.
வெளி இணைப்புகள்
[தொகு]- s:ta:மனோன்மணீயம்
- மனோன்மணீயம் (மதுரைத் திட்டம்)
- மறக்கமுடியுமா? ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரனார் கருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 2017