உருவம் சிறிதாயினும் தமிழனென்ற கருவம் மிகப்பெரிது. அதைவிடப்பெரிது தமிழன்னை பாலுள்ள பற்றும் நட்பும்!
மூன்று டிப்ளோமா பட்டங்களும், மூன்று இளங்கலை பட்டங்களும், மூன்று முதுகலை பட்டங்களுடன் ஒரு முனைவர் பட்டமும் அன்னைத்தமிழும் சரசுவதியும் இணைந்து அளித்த வெகுமதிகளாக நினைக்கிறேன்.
வாழ்வு முழுதும் தொடர்ந்து கல்வி கற்று முனைவர் பட்டம் வாங்கியும், வாங்கியது ஆங்கில என்பதால், பல கிண்டல்களுக்கு மத்தியில் தமிழில் இளங்கலை இலக்கியம் பயிலும் மாணாக்கன்.
பணி: கணினித்துறையில் கல்வியாளர்களின் பங்காளன். வாழ்விடங்கள்: சென்னை மாநகரம், இணையதளம், மற்றும் இணையதளத்தை படித்தறியும் நேயர்களின் உள்ளங்கள்.
நாடு யாமம் என்றாலும் எழுந்தமர்ந்து சில பல வெண்பாக்களையோ, அகவல்களையோ, விருத்தங்கலையோ, ஓரிரு தாண்டகங்களையோ கிறுக்குபவன்.
விடுமுறைகளன்று மற்றுமின்றி எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, முகக்கண்களுக்கும் படக்கருவிக்கண்களுக்கும் பசுமை விருந்தளிக்க இயற்கை வளம்கொஞ்சும் புல்வெளிகள், மணல்தடங்கள், குளக்கரைகள், சரணாலயங்கள் போன்ற இடங்களை நாடுபவன். சில பல நிழற்படங்களும் குறுந்திரைப்படங்களும் இணையதளங்களில் உள்ளன.
பல சித்திரங்களை வடிப்பதும் சில நேரங்களில் களிமண்ணில் விரல்கொண்டு விளையாடுவதும் உண்டு. காகிதக்கிறுக்கல்கள் மட்டுமின்றி கணினிக்கிறுக்கல்களும் செய்வதுண்டு.