நுண்கற்காலம்

நுண்கற்காலம் என்பது நுண்கற்கருவிகளை மக்கள் பயன்படுத்திய காலம் ஆகும். நுண்கற்கருவிகள் என்பன கற்பட்டடைக் கழிவுகள், தற்செயலாக உருவான கற்பொருட்கள் என்பவற்றிலிருந்து வேறுபடுத்தக்கூடிய வகையில் போதிய அளவு வேலைப்பாடுகளுடன் கூடிய மிகவும் சிறிய கற்கருவிகளைக் குறிக்கும். தீக்கல், சிறு உருளைக் கற்கள் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படும் இக் கருவிகள் பெரும்பாலும் ஒரு சதம மீட்டர் நீளம் கொண்டவையும் அரை சதம மீட்டர் அளவு அகலம் கொண்டவையும் ஆகும்.
நுண்கற்கருவிகளின் பயன்பாடு பழைய கற்காலத்தின் இறுதிப் பகுதியிலும், இடைக் கற்காலம், புதிய கற்காலம் ஆகிய காலப்பகுதிகளிலும் இருந்து வந்தது. வேளாண்மையின் அறிமுகத்தோடு நுண்கற்கருவிகளின் பயன்பாடு குறைந்துவிட்டது. எனினும், வேட்டைத் தொழிலில் ஈடுபட்டிருந்த சமூகங்களில் இவ்வகைக் கற்கருவிகளின் பயன்பாடு தொடர்ந்தும் இருந்து வந்தது.