தோல் பாவை நிழற்கூத்து









தோல் பாவை நிழற்கூத்து என்பது தமிழகத்தின் தொன்மையான கதை சொல்லும் கலையாகும். இதில் பதப்படுத்தப்பட்ட ஆட்டுத்தோலில் வரைந்து வெட்டப்பட்ட உருவங்களைக் ஒளியூட்டப்பட்ட திரைக்குப் பின்னால் வைத்துக்கொண்டு கதை சொல்லப்படுகிறது. உலகில் தற்போது சுமார் 20 நாடுகளில் தோல் பாவை நிழற்கூத்து பழக்கம் உள்ளது. இதில் சீனா தோல் பாவை நிழற்கூத்து மிகவும் புகழ் பெற்றதாகும்.
தமிழகத்தில் தோல் பாவை நிழற்கூத்து
[தொகு]தமிழகத்தில் தோல் பாவை நிழற்கூத்து தஞ்சாவூரை ஆண்ட சரபோசி மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இன்றும் தமிழகத்தில் இக்கலையை நடத்துபவர்கள் மராட்டி மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். இக்கூத்துக்கலையை தெரிந்தவர்கள் மிகவும் குறைவானவர்களே ஆவார் (30க்கும் குறைந்த குடும்பங்கள்). இக்கலை இப்போது நலிவடைந்த நிலையில் உள்ளது.
தோல் பாவை நிழற்கூத்திற்கு தேவையானவை
[தொகு]- தோலில் வரைந்து வெட்டப்பட்ட உருவங்கள்
- வெள்ளை நிறத்திரை
- ஆர்மோனியம்
- டோலாக்கு(மோளம்)
- திரைக்கு பின் ஒளி
தோல் பாவை நிழற்கூத்தில் நடத்தப்படும் கதைகள்
[தொகு]- இராமயணம்
- மகாபாரதம்
- அரிசந்திரா கதை
- நல்ல தங்காள் கதை
- மயில் ராவணன் கதை
- வள்ளி திருமணம்
தற்போதைய தேவைக்கேற்ப பல சமுதாய விழிப்புணர்வு கதைகளும் இதில் நடத்தப்படுகிறது. இதில் சாலை விதி கடைபிடித்தல், தீண்டாமைக் கொடுமை, நுகர்வோர் நலன், சுற்றுபுற சூழல் பாதுகாப்பு, எய்ட்சு நோய் விழிப்புணர்வு போன்றவைகளும் அடங்கும்.
தோல் பாவை நிழற்கூத்து கலைஞர்களின் நிலை
[தொகு]1980களுக்குப் பிறகு தொலைக்காட்சிகளின் வருகையால் தோல் பாவை நிழற்கூத்து கலைஞர்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. மேலும் சாதிச் சான்றிதழ் இல்லாமை, வீட்டு வசதி இல்லாமை போன்ற பிரச்சனைகளும் இவர்களுக்கு உண்டு. இக்கலைஞர்கள் பொரும்பாலும் தங்களின் பூர்வீகத் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில்களுக்கு செல்லத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் தேனி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். தமிழகத்தின் தோல் பாவை நிழற்கூத்து குழுக்களில் தேனியைச் சேர்ந்த "முத்து லச்சுமண ராவ் குழு" மிகவும் புகழ் பெற்றதாகும்.