உள்ளடக்கத்துக்குச் செல்

கொலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொலு என்றால் அழகு என்று பொருள். கொலு என்பது நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். பெரும்பாலும் இந்தியாவின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் இவ்வழிபாட்டு முறை நடைபெறுகிறது. இப் பண்டிகை பொதுவாக தமிழ் மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையை அடுத்து வரும் பிரதமை திதியிலிருந்து பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது இந்து சமயம் சக்தியின் வழிபாடாகக் கருதப்படுகிறது.[1][2][3]

சொற்பிறப்பு

[தொகு]
ராதா கிருஷ்ணா கொலு பொம்மை.

பொம்மை கொலு தமிழ் மொழியில் "தெய்வீக இருப்பு" என்ற பொருளிலும், பொம்மல கொலுவு தெலுங்கில் பொம்மகளின் கோட்டை என்ற பொருளிலும், கன்னட மொழியில் பொம்பெ ஹப்பா என்பது "பொம்மைத் திருவிழா" என்ற பொருளிலும் வழங்கப்படுகிறது.[2]

கொலு வைக்கும் முறை

[தொகு]

கொலு வைப்பதற்கு முன்பு வீட்டைச் சுத்தம் செய்து, ஒற்றைப் படையில் அதாவது, ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகள் வைத்து கொலு வைக்கப்படும்.[4] கொலுவில் வைக்கப்படும் பொம்மைகள் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்டு, அடர்ந்த நிறங்களால் வர்ணம் பூசப்பட்டவையாக இருக்கும். மேற்படியில் ஆரம்பித்து கீழ்ப்படி வரை பொம்மைகள் கலைநயத்துடன் கதை சொல்லும்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

கொலு பொம்மைகள்

[தொகு]

கொலுவில் கடவுள் சிலைகளுடன், மனிதனின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சித்தரிக்கும் பொம்மைகளும் இடம் பெறுகின்றன. இந்து சமய புராணங்களைச் சித்தரிக்கும் பொம்மைகள், தேரோட்டம், கடவுளர்களின் ஊர்வலம், அணிவகுப்பு, திருமண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் பொம்மைகள், சிறிய அளவிலான சமையலறை சொப்பு சாமான்கள், விலங்குகள், மரங்கள் மற்றும் பறவைகள் பொம்மைகளும் இடம் பெறுகின்றன.[2][5]

மரப்பாச்சி பொம்மைகள்

[தொகு]

கொலுவில் மரப்பாச்சி பொம்மை முக்கிய இடம் வகிக்கிறது. இவை சந்தன மரம் அல்லது தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் உருவ பொம்மைகளாகும். ஒவ்வொரு வருடமும் இந்த பொம்மைகளை புது துணிகளைக் கொண்டு மணமகன்-மணப்பெண் ஒப்பனையில் அலங்கரித்து கொலுவில் வைப்பார்கள். தென்னிந்திய திருமண சடங்கின் போது மரப்பாச்சி பொம்மைகளைத் தாய்வீட்டு சீதனமாக கொடுக்கும் வழக்கம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. இப் பொம்மைகள் வழிவழியாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

வழிபாடு

[தொகு]

நவராத்திரி விழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் இந்து சமயத்தில், சக்தியின் அம்சங்களாக கருதப்படும் துர்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் இலட்சுமிக்கும் கடைசி மூன்று நாட்கள் சரசுவதிக்கும் விசேட பூசைகள் செய்து கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் வெற்றியைக் குறிக்கும் நாளாக "விஜய தசமி" என்று கொண்டாடப்படுகிறது. அன்று "வித்யாரம்பம்" மற்றும் புதிய கலைகள் கற்றுக் கொள்வதற்கு ஏற்ற நாளாக இருப்பதால் இன்றளவும், மக்கள் புதிய செயல்களைச் செய்ய ஏதுவாக உள்ளது.

இவ்விழா பெண்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விழாவாக இருக்கிறது. நவராத்திரி பத்து தினங்களும் மாலை வேளையில் நிறக்கோலம் இட்டு, குத்து விளக்கேற்றி, சக்தி தேவியின் தோத்திரப் பாடல்களை பாடி மகிழ்வார்கள். கொலு வைத்துள்ள வீட்டிற்கு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தினமும் மாலை வேளையில் வருகை புரிந்து பக்திப் பாடல்களை பாடுவதும், புராணங்கள் வாசிப்பதும் நடைமுறையாக உள்ளது. பின்னர் கடவுளுக்கு படைக்கப்பட்ட இனிப்பு மற்றும் பலகார வகைகளை வீட்டிற்கு வந்தவருக்கு கொடுத்து உபசரிப்பார்கள்.[5][6] முக்கிய கோவிலான மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பிரகார மண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி நோன்பு முன்னிட்டு கொலு வைக்கின்றனர்.[7][8][9] கொலு வைக்கும் முறை அனைத்து கோவில்களிலும் குறிப்பாக தமிழ்நாடு, கருநாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம், போன்ற மாநிலங்களில் பரவலாக உள்ளது.

படிமங்கள்

[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. Unique, artistic, creative: Kolu plans, The Hindu (OCTOBER 06, 2012)
  2. 2.0 2.1 2.2 Peter J. Claus; Sarah Diamond; Margaret Ann Mills (2003). South Asian Folklore: An Encyclopedia : Afghanistan, Bangladesh, India, Nepal, Pakistan, Sri Lanka. Taylor & Francis. pp. 443–444. ISBN 978-0-415-93919-5.
  3. Nikki Bado-Fralick; Rebecca Sachs Norris (2010). Toying with God: The World of Religious Games and Dolls. Baylor University Press. pp. 35–36. ISBN 978-1-60258-181-4.
  4. தினமலர், ஆன்மிக மலர், "கொலு வைக்கப் போறோம்", பக்-29, அக்டோபர் 13,2012.
  5. 5.0 5.1 Philippe Bornet; Maya Burger (2012). Religions in Play: Games, Rituals, and Virtual Worlds. Theologischer Verlag Zürich. pp. 188–194. ISBN 978-3-290-22010-5.
  6. Vasudha Narayanan (2015). Knut A. Jacobsen (ed.). Routledge Handbook of Contemporary India. Routledge. p. 342. ISBN 978-1-317-40358-6.
  7. Navarathri celebrations: Meenakshi temple golu display steals the show, The Times of India (Oct 6, 2016)
  8. Crowds throng Madurai Meenakshi temple for ‘golu’, The Hindu (OCTOBER 06, 2013)
  9. Gods and gopurams in full glow, The Hindu (OCTOBER 01, 2014)

வெளி இணைப்புகள்

[தொகு]

செருமனியில் கொலு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலு&oldid=3408979" இலிருந்து மீள்விக்கப்பட்டது